Tuesday, July 04, 2006

என்னுள்ளே நான்

-இந்துமகேஷ்.


தன்னையுணர்தல் என்பது பக்தியின் முதல் நிலை.
தன்னைத்தான் அறிந்தவன் தான் வேறு தெய்வம் வேறு என்று பிரித்துப் பார்ப்பதில்லை. தன்னுள் வாழும் தெய்வத்தைக் கண்டுகொண்டபின் தானே தெய்வம் என அவன் உணர்கிறான்.

நீயும் நானும் காதலால் இணைந்துகொண்டபின் நீ வேறு நான் வேறு என்று எப்படிப் பகுத்துவிட முடியாதோ அதுதான் இங்கேயும் நடக்கிறது.
கண்டதும் காதலில் கலந்துவிட்டோம் நாம்.
இந்தக் காணுதல் என்பது உன்னை நானும் என்னை நீயும் கண்டு கொண்டதால் அல்ல என்னை நானும் உன்னை நீயும் கண்டுகொண்ட பின்தான் ஆரம்பித்தது என்பதை நாம் இருவருமே மறந்துவிடக்கூடாது. இப்போது நீ வேறு நான் வேறு என்று எனக்குத் தோன்றவில்லை. நீயும் அவ்வாறே உணர்வாய் என்பதையும் நான் அறிவேன். இப்போதும் நீ கடவுளோடு கலந்திருக்கின்றாய். அவ்வாறேதான் நானும். ஏனெனில் உன்னிலிருந்து இனி நான் பிரியப் போவதில்லை. இந்தக் காதல் இனி வளரும். உயிர்க் கலப்பில் இது சங்கமித்து அந்த ஒரே பரம்பொருளிடம் தன்னை ஒப்புவித்துவிடும். அதற்காத்தானே காத்திருந்தோம் இத்தனை காலமாய்.

ஆனால் இந்தக் காதலுக்கும் எண்ணற்ற தடைகள்.
நம்மை மறுபடி மறுபடி மீள இழுத்து மாய வலைக்குள் மயங்கிப் போக வைக்கும். ஆனால் தெளிவு பெற்றபின் காதலின்றி வேறு எதுவும் நம்மை ஆட்கொள்ளமுடியாது. அந்த வைராக்கியம் நமக்கு உண்டு.

சொர்க்கம் என்றும் நரகம் என்றும் வெவ்வேறு உலகங்கள்.
இறைவனோடு இரண்டறக் கலப்பது சொர்க்கம். மாயைகளுக்குள் மயங்கிப்போவது நரகம். ஆனால் இந்த மாயை என்பது காதலின் மற்றொரு வடிவம்.

மனதைக் கவர்வதற்காய் வகைவகையாய்த் தெய்வ வடிவங்கள். இதுவும் ஒருவித மாயைக்குள் நம்மை மயங்கவைக்கும் முயற்சி. ஆனால் இந்த வடிவங்களை ஆக்கிவைத்தவன் மனிதன்தான்.

தன்னுள் இருக்கும் தெய்வத்திற்கு வடிவம் கொடுத்துப் பார்க்க முயற்சித்ததன் விளைவே இவை. தனது சாயலாக இறைவன் மனிதனைப் படைத்தான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மனிதன் கடவுளுக்குத் தனது வடிவத்தையே தந்தான். ஆனால் மனிதன் செய்தான் என்பதற்காக அவை வெறும் கல் மண் என்று நாங்கள் ஒதுக்கிவிட முடியுமா?

விக்கிரக ஆராதனைக்காரர்களே விலகிப்போங்கள் என்று பல குரல்கள் பல இடங்களில் ஒலிக்கின்றன. அதற்காக விக்கிரகங்களை எல்லாம் உடைத்தெறிதல் நியாயமா?

உயிரோடு உறவாடிக்கொண்டிருக்கும் உடல் என்ற விக்கிரகம்.
இது நானில்லை என்று எனக்குத் தெரிந்தாலும் இதை அடையாளப்படுத்தித்தான் என்னை இனங்காட்டிக்கொள்ள முடிகிறது.
இந்த உடலை எறிந்துவிட்டு ஒருநாள் ஓடிப்போகும்போது சவம் என்று முகம் சுளிக்கப் போகிறது உலகம். அதற்காக என்னை அடையாளப்படுத்திக்கொள்ள உபயோகிக்கப்படும் இந்த உடலை உதறி எறிந்துவிட்டால் இந்த உலகத்திற்கு என்னை எப்படி நான் காண்பிக்க முடியும்?

விக்கிரகத்துக்குள் தெய்வத்தைக்காண உன்னால் முடியவில்லை என்றால் உன்னுள் இருக்கும் தெய்வத்தையும் உன்னால் காணமுடியாமல்போகும்.

நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புஷ்பம் சாற்றியே
சுற்றிவந்து முணுமுணென்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில்
-இது ஒரு சித்தர் சொன்னது.

நட்ட கல்லும் பேசுமோ? பேசாது!
ஏன் பேசாது?
கல்லுக்குள் இருப்பதாக இவன் கற்பனை பண்ணிக் கொண்டிருக்கும் இறைவன் இவனுள் அல்லவா இருக்கிறான்.
ஆனால் நட்ட கல்லும் பேசும்- இவன் நம்பிக்கையோடு இறைவனை அங்கே தேடினால்.
அந்த நம்பிக்கையின் உயிரே காதல்.

-இந்துமகேஷ் எழுதிய "காதலாகிக் கசிந்துகண்ணீர் மல்கி.." தொடர்-
(பிரசுரம்: வெற்றிமணி தை 2003)

Total Pageviews