Sunday, June 21, 2009

கண்டுகொண்டேன்...
























-இந்துமகேஷ்





"கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்!" என்று காதலில் கலந்துவிட்டாயா? உன்னுள் இருக்கும் உன்னை உன்னால் கண்டுகொள்ள முடிந்திருக்கிறதா? இனி நீ கடவுளைக் காண வேறெங்கும் போகவேண்டியதில்லை.
கடவுள் உன்னோடு கலந்துவிட்டாயிற்று.
கடவுளிடமிருந்து உன்னையும் உன்னிலிருந்து கடவுளையும் இனித் தனித்தனியாகப் பிரிக்கமுடியாது. கடவுள் என்னும் மாபெரும் சமுத்திரத்தில் ஒரு துளியாக இருந்த நீ இப்போது சமுத்திரமாக மாறிவிட்டாய்.
இனி சமுத்திரம் வேறு துளிநீர் வேறு என்று பிரிப்பதற்கில்லை.

பரந்து விரிந்த இந்த உலகில் வீசிக்கொண்டு இருக்கும் காற்று. இதில் எனது சுவாசக் காற்று என்றும் உனது சுவாசக் காற்று என்றும் பகிர்ந்துகொண்டு சுவாசிக்க நம்மால் ஆகாது. வீசும் காற்றில் உனது மூச்சும் எனது மூச்சும் ஒன்றாகக் கலந்தாயிற்று. எல்லாவிதமான பேதங்களையும் கடந்து எங்கள் சுவாசங்களை இந்தக் காற்றில் கரைத்துவிட்டோம்.
இனி எனது என்றும் உனது என்றும் பிரித்துப்பார்க்க எதுவுமில்லை.
இதுதானே தெய்வீகநிலை. இதற்குமேல் இனி வேறேது வேண்டும்.

என்னை நீராய் உருக்கி என் ஆருயிராய் நிற்பதற்காய், தந்தையெனும் ஓர் ஆண்மகனைக் காட்டி அவனது விதைப்பைக்குள் என்னை அடைத்து அன்னையின் கருப்பைக்குள் வரவழைத்து அருவமான என்னை உருவமாக்கி அகிலத்தில் நடமாட வைத்த அந்தச் சக்தியை வெளியிலிருந்து கண்டுகொள்ள என்னால் முடியாது என்பதால்தான் எனக்குள் அவனை(ளை)த் தேடினேன்.
"நான்" என நான் அறிந்த என் உருவம் பொய்யாய்ப் போக, என்னில் என்தந்தையும் தாயும் இணைந்திருக்கக்கண்டேன்.
அன்னை தந்தை என இருவரின் கூட்டு நான்.
நீயும் அதுபோல்.
ஒரு பெண்மையும் ஓர் ஆண்மையும் கலக்காமல் எந்த உடலும் உருப்பெற்றதில்லை.

நீ ஒரு பெண்ணா? உன்னில் பாதியாய் ஓர் ஆண்மை உன்னிடம் உள்ளது. நீ ஓர் ஆணா? உன்னில் பாதியாய் ஓர் பெண்மை உன்னிடம் உள்ளது.

தந்தையும் தாயுமானவன் இறைவன் எனில் அவனுக்கோ தந்தை தாய் எவருமில்லை. அதனால் ஆணாகிப் பெண்ணாகி அர்த்த நாரீஸ்வரனாய் தோற்றம் காட்டுவான் அவன்.
"நான் நான் " என ஆணவம் காட்டும் எனது மனம், தான் என்பது அற்றுப் போகும் தருணத்தில் நான் எனும் இந்த உடலம் மறுபடி அருவமாகும்.

உனது பார்வைக்கு நான் புலனாவதில்லை. எனது பார்வைக்கு நீ புலனாவதில்லை. ஆனால் நம்மில் நாம் கலந்திருப்போம். நம்மைப் போலவே உருவம் கொண்ட இறைவன் ஒருநாள் தன் உருவம் இன்னதுதான் என்று அடையாளம் காட்டாமல் தன்னை மறைத்துக் கொள்வான். அவனில் நாம் மறைந்துகொள்வோம்.

இயற்கை நம்மைப் பிறப்பித்தது. இயற்கை நம்மை வாழ்வித்தது. இயற்கையே நம்மை மறைப்பிக்கும். ஆனால் இயற்கையின் அம்சமான நாம் இயற்கையைவிட்டு விலகுவதில்லை.அதனோடு இரண்டறக் கலந்திருக்கிறோம். இந்த இயற்கையை இயக்கும் ஒரு சக்தி இறையாகி நின்று எம்மை வழிநடத்துகிறது. முடிவில் அதுவே நாமாகி நம்மைத் தன்னுள் ஒடுக்குகிறது. இந்த ஒடுக்கமே பேரானந்தமாக நம்மை ஆட்கொள்கிறது.

முத்திநெறி அறியாத மூடரொடு முயல்வேனைப் பக்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம் சித்தமலம் அறிவித்துச் சிவமாக்கி எனையாளும் அத்தனடி சேர்வதற்கு அடிப்படையாவது காதல்.
அதனால்தான் காதலாகி கசிந்து கண்ணீர்மல்கி ஓதுவாரோடு சேர்ந்து நன்னெறிக்குள் புக உகந்த மார்க்கம் என்று தேடிக் கண்டுகொண்டேன் நான். அந்த அருள்நெறிக் காதலில் முழுமை பெற இன்னும் நடந்தாகவேண்டும் நெடுந்தூரம்.
இந்தக் காதல் எப்போது சித்திக்கும்?

அப்பருக்கு எண்பத்தொன்று அருள்வாதவூரருக்கு செப்பிய நாலெட்டில் தெய்வீகம்- இப்புவியில் சுந்தரர்க்கு மூவாறு தொல்ஞான சம்பந்தர்க்கு அந்தம் பதினாறு என்று சமயகுரவர் நால்வரும் பல்வேறு வயதுகளில் முக்தி பெற்றனர்.

எவரெவர்க்கு எப்போது என்பது அவரவர் தேடலைப் பொறுத்தே அமையும். தேடுங்கள் கண்டடைவீர்கள் என்பது தேவகுமாரனின் திருவாக்கு அல்லவா?

தேடுவோம்!
நம்முள் இருக்கும் நம்மைத் தேடுவோம்
நாமாக இருக்கும் இறைவனைத் தேடுவோம்.


(பிரசுரம்: வெற்றிமணி)
(இந்துமகேஷ் எழுதிய காதலாகி கசிந்து கண்ணீர்மல்கி... தொடரிலிருந்து)

Friday, June 05, 2009

மீளா அடிமை உமக்கே ஆளாய்...










- இந்துமகேஷ்




அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், உணர்ந்தும் உணராமலும் தொடர்வது வாழ்க்கை.
இந்தத் தொடர்கதை இன்பம் நோக்கியது. முடிவில் இன்பம் பெறவென முயன்று கொண்டேயிருப்பது.
முழுதான இன்பத்தை அது ஒருபோதும் தொட்டதில்லை எனும்போது முற்றுப் பெறாத இந்தத் தொடரின் முடிவுதான் என்ன?

பிறப்பெடுத்த எல்லா உயிர்க்கும் இறப்பு என்பதே முற்றுப் புள்ளியாய்த் தெரிகிறது.
பிறப்பின் பின் மரணம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால் எல்லோரும் அறிந்த இந்த ஒன்றில் அறியாமல் கலந்திருப்பதும் ஒன்றுண்டு. அது மரணத்துக்குப் பின்னும் ஒரு வாழ்வுண்டு என்பது.
„மரணத்துக்குப் பின் வாழ்வாவது.. அதை அறிந்துவந்து சொன்னவர் யார்?“ எனும் கேள்விக்கு நம்பத்தகுந்தமாதிரி பதில் சொல்லத் தெரியாமல், தெரிந்தாலும் தெளிவுபடுத்த முடியாமல் மௌனித்துப் போகிறார்கள் எல்லோரும்.
உணர்ந்தவர்களால் மட்டுமே இந்த உண்மையைக் கண்டுகொள்ளமுடியும்.
பிறருக்கு அதை உணர்த்தமுடியாமல் போவதற்குக் காரணங்கள் பல இருக்கலாம்.
ஆனால் உணர்வதற்குத் தன்னைத்தான் உணரத்தலைப்பட்டவருக்கு இயலும்.

தன்னைத்தான் உணர்ந்தவன் பிற உயிர்கள அனைத்திலும் அன்பு கொள்கிறான். அன்பினால் பிறரை இவன் ஆளுகை செய்தபோதிலும் உண்மையில் இவன் தன்னையோர் அடிமையாகவே காட்டிக் கொள்கிறான்.

„நிலா நிலா ஓடிவா..!
நில்லாமல் ஓடிவா...
மலைமேலே ஏறிவா
மல்லிகைப் பூக் கொண்டுவா!“
- குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு அதற்கு உணவூட்டும் தாய் அந்தக் குழந்தையின் மகிழ்ச்சிக்காகத் தன்னையும் குழந்தையாக்கிக் கொள்கிறாள்.
வானத்திலிருக்கும் நிலவு பூமிக்கு வருவதாவது.
நிலவுபற்றி அன்னைக்குத் தெரியும். குழந்தைக்குத் தெரியாது. ஒளிவீசும் ஒரு கிரகம் வானத்தில் உலாவந்துகொண்டிருக்கிறது என்பதை அது உணராது. ஆனால் நிலவின் ஒளியை அது உணர்கிறது. நிலவு பூமிக்கு வராது ஆனால் நிலவின் ஒளி வரும் என்று அன்னைக்குத் தெரியும். குழந்தையின் மகிழ்ச்சி ஒன்றே குறிக்கோளாய் அவள் நிலவை அழைக்கிறாள். நிலவைப் பார்த்து மகிழ்ந்தபடி அன்னை ஊட்டும் அடுத்த பிடி உணவுக்காக வாயைத் திறக்கிறது குழந்தை.
இப்போது இங்கே இரண்டு குழந்தைகள்.
வானத்து நிலவை வாவென்று அழைக்கும் அன்னையும் தன் குழந்தையோடு குழந்தையாகிறாள். அறிந்ததை அறியாததாய், தெரிந்ததை தெரியாததாய், உணர்ந்ததை உணராததாய் காட்டிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் எல்லோரது வாழ்க்கையிலும்தான் வருகின்றன.
„எல்லாம் எனக்குத் தெரியும்!“ என்ற இறுமாப்பு ஒருவனை வீரனாகக் காட்டலாம். „சொல்லுங்கள் கேட்கிறேன்!“ என்று பணிவோடு நிற்பவன் அடிமைபோலத் தோன்றலாம். ஆனால் உண்மை வேறானது. அடிமைக் கோலம் என்பது பக்தியில் மூழ்கி நிற்பவனுக்கு பரவசம் தருவது.
உலக சுகங்களுக்காக மற்றவர்க்கு அடிமையாயிருத்தல் என்பது அவமானகரமானது.
தன்னலம் மறுத்து தன் சுகம் வெறுத்து மற்றவர் நலம் நோக்கும் உயரிய கொள்கைகளோடு பிறருக்காய் வாழ்வதென்பது பார்வைக்கு அடிமைத்தனம் எனப் பெயர் கொண்டாலும் அந்த அடிமைத்தனம் உயர்வானது.
அன்பினால் பிற உயிர்களை ஆண்டுகொண்டே அவர்க்கு அடிமையாய் சேவகம்செய்பவன் உண்மையில் இறைவனுக்கே அடிமையாகிறான். தன்னலத்துக்காக பிறரை அடக்கியாளுகின்ற வீரத்தைவிட மற்றவர்கள் பணிக்கெனத் தன்னைத் தாழ்த்திக்கொண்டு, „என்கடன் பணி செய்துகிடப்பதே!“ என வாழும் அடிமையே உயர்வானவன்.
அவன் இறைவனின் அடிமை.
அவனுள் இறைவன் வாழ்வதால் ஆள்பவனும் அவனே.



மாடும் சுற்றமும் மற்றுள போகமும்
மங்கையர் தம்மோடும்
கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு
குலாவியே திரிவேனை
வீடு தந்தென்றன் வெந்தொழில் வீட்டிட
மென்மலர்க் கழல்காட்டி
ஆடுவித்தென தகம் புகுந்தாண்டதோர்
அற்புதம் அறியேனே!

(மாணிக்கவாசகர்)

Total Pageviews