Saturday, January 02, 2010

கேள்விக்கென்ன பதில்?



















-இந்துமகேஷ்




வாழ்க்கை கேள்விகளால் நிறைந்தது.
பதில்கள் கிடைக்கிறதோ இல்லையோ கேள்விகள் நிறைந்து வழிகின்றன.
பதில்களுக்காகக் காத்திருப்பவர்களும் பதில்களைத் தேடும் முயற்சியில் ஈடுபாடு காட்டுபவர்களுமாய்... வாழ்க்கை நகர்கிறது.
எல்லோரது வாழ்வும் சில கேள்விகளோடுதான் முற்றுப்பெறுகின்றன.

வாழ்பவர்கள் பதில்களுக்காய் காத்திருக்கிறார்கள். ஆனால் என்றோ ஒருநாள் இவர்களும் கேள்விகளுடனேதான் தம் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்கள்.
என்ன? ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? எங்கே? எது? எவர்? ....என்று நீண்டு செல்லும் கேள்விகளின் வரிசையில் எங்கோ ஒரு புள்ளியில் எல்லோருமே நிற்கிறார்கள்.
பதிலுக்காகக் காத்துக்கொண்டு அல்லது பதிலைத் தேடிக்கொண்டு!

„உலக வரைபடத்தில் உனது நாடு எங்கே இருக்கிறது என்று காட்டு!“
- ஒரு மாணவனிடம் ஆசிரியர் கேட்கிறார்.
மாணவனுக்குத் தெரியவில்லை. உலகவரைபடத்தில் ஆட்காட்டிவிரலால் வட்டமடித்துக்கொண்டு விழிக்கிறான் அவன்.
„தெரியுமா தெரியாதா?“
-ஆசிரியர் அதட்டுகிறார்.
„தெரியாது!“
-முணுமுணுப்பாய் வரும் பதிலோடு கூடவே அதை உறுதிப்படுத்தும் விதமாகத் தலை அசைகிறது.
„இதுகூடத் தெரியவில்லை! போடா போ.. போய் அந்த வாங்கின்மீது ஏறிநில்!“
அவனுக்கான தண்டனை அது.
„வாங்கில் ஏறி நின்றால் எனது நாடு தெரியுமா..?“
-வெகுளித்தனமாகக் கேட்கிறான் அவன்.

அவனுக்கான தண்டனை என்பது அவரது கேள்விக்கான பதில் அல்ல என்பது ஆசிரியருக்குத் தெரியும்.
அதுவே அந்தக் கேள்விக்குப் பதிலும் அல்ல.
அந்தத் தண்டனை அவனது முயற்சியின்மைக்கானது. ஆரம்பத்தில் ஆசான் கற்றுத் தரும்போது அலட்சியமாக இருந்துவிட்டு கேள்வி எழும்போது பதில் தெரியாமல் விழிக்கும் அறியாமைக்கானது.
உண்மையில் உலகவரைபடத்தில் அவனுடைய நாடும் இருக்கிறது. ஆனால் உண்மையாக அது அவனது நாடு அல்ல. அதாவது அவனது உண்மையான நாடு அந்த வரைபடத்தில் இல்லை. அது இந்த உலகத்தில் இருக்கிறது.

எத்தனை கேள்விகள் உலகத்தில் தோன்றினாலும் அத்தனை கேள்விகளும் ஒரு முற்றுப் புள்ளியில்தான் வந்து தரிக்கின்றன.
அந்தப் புள்ளியே கடவுள்.
சந்தேகமிருப்பின் உங்களுக்குள் ஒரு கேள்வியை எழுப்புங்கள். அந்தக் கேள்விக்கான விடையைத் தேடுங்கள். பதில் கிடைத்திருந்தால் அந்தப் பதிலிலிருந்து இன்னொரு கேள்வி என்று இப்படியே கேள்விகளைத் தொடருங்கள். விடைகாண முடியாத ஒரு கட்டத்தில் அந்தக் கேள்விகள் வந்து தரிக்கும். எப்போது ஒரு விடைகாணமுடியாத கேள்வியில் நீங்கள் வந்து நிற்கிறீர்களோ அப்போது இறைவன் தெரிவான். இதுவே யதார்த்தமானது.

ஒரு விடைகிடைத்தபின் அதற்குமேல் கேள்விகள் எழுப்பாதவன், எந்தக் கேள்விக்கும் விடைக்கு அவசியம் இல்லை என்று நினைப்பவன், தன்னை முற்றும் அறிந்தவன் என்றும் பகுத்தறிவுவாதி என்றும் சொல்லிக் கொள்வதன்மூலம் தொடர்ந்து தேடும் எண்ணம் இல்லாமல் உலக சுகங்களுக்கான விடயங்களில் மட்டும் மூழ்கிப்போய் அதற்கு ஓர் எல்லையை வகுத்துக்கொண்டிருப்பதால் அவன் அதற்குமேல் கேள்விகளை எழுப்புவதில்லை.
முற்று முழுதான அவனது ஒரே விடை: “கடவுள் என்று எதுவுமே இல்லை!”

அப்படிச் சொல்பவன் தனக்குள்ளிருக்கும் தன்னைத் தேடிப் பயணிப்பதில்லை. அந்தத் தேடுதலுக்கான கேள்விகள் எதுவும் அவனிடம் இல்லை.

ஆனால் தேடத் தயங்காதவர்களோ கேட்கவும் தயங்குவதில்லை.
தன்னைத்தானே கேட்டுக்கொள்ளும் ஒவ்வொரு கேள்விக்கும் இவன் கடவுளிடம் பதில்களைக் கண்டடைகிறான். அதாவது கடவுளையே பதிலாகக் காண்கிறான். அதனால் கடவுளிடமே பதில்களைத் தேடுகிறான்.

வாழ்கின்ற காலம்வரை உலகவாழ்வுக்கான தேடுதல்கள் எத்தனை அவசியமோ இந்த உலகவாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும்போது அமைதியாக விடைபெறுவதற்கும் ஒரு தேடுதல் அவசியம்.
அதை உணாந்தவனே ஆன்மீகவாதியாகிறான்.

“நான் நாத்திகவாதி!” என்று சுயதம்பட்டம் அடித்துக்கொள்ளும் மனிதர்களிடத்தும் இறைவன் உறைந்திருக்கிறான் என்பதை ஆன்மீகவாதி உணர்ந்தே இருக்கிறான்.
“என்னிடத்தும் கடவுளா?” என்று ஏளனச் சிரிப்புச் சிரிக்கும் நாத்திகவாதி, “நான்தான் கடவுளே இல்லை என்று சொல்கிறேனே!” என்று ஒட்டுமொத்தமாகக் கூறிக் கொண்டிருந்தாலும், “என்னிடத்தும் கடவுளா?” என்று அவன் கேட்க ஆரம்பித்துவிட்டால் போதும் அவனது அந்தக் கேள்விக்குப் பதிலாக அவனுள் இருக்கும் இறைவன் வெளிப்படுவான்.
கேள்வி எழுப்பப்பட்டாலும் எழுப்பப்படாவிட்டாலும் பதில் என்பது நிச்சயமானது. நிரந்தரமானது.
இறைவனும் அவ்விதமே!


யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன்
வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன்
தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனேஎம் பெருமான்எம்
மானேஉன் அருள்பெறுநாள் என்றென்றே வருந்துவனே!
(மாணிக்க வாசகர்)
(பிரசுரம்: சிவத்தமிழ் 2010)

Total Pageviews