Wednesday, December 12, 2012

கடைசிக் காலம்


கடைசிக் காலம்-




இந்துமகேஷ்.




.“கடவுள் பூமியைப் படைத்தார்!“
-இறைநம்பிக்கையாளர்களின் கருத்து அது.

„கடவுள் பூமியைப் படைத்தார் என்றால் அந்தக் கடவுளைப் படைத்தது யார்?“
-இறைமறுப்பாளர்கள் எழுப்பும் கேள்வி இது.

„இந்த உலகத்தைப் படைத்தவன், இந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் மூலமானவன் ஏன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை? எவருக்கும் புலனாகாமல்  அவன் மறைந்திருப்பானேன்?“

-கேள்விகள் காலகாலமாகத் தொடர்கின்றன.
ஆனால், „கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்“ என்பதுதானே யதார்த்தம்.

தத்தம் இதயக்கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு இறைவனின் வருகைக்காக நம்பிக்கையோடு காத்திருப்பவர்கள்; அவனைக் கண்டுகொள்கிறார்கள் என்பதே 
ஆன்மீகவாதிகளின் சித்தாந்த முடிவு.
ஆனால் அது எப்போது?
காலம் கனியவேண்டாமா?
ஆனால் அதுவே கடைசிக் காலமாகவும் கணிக்கப்படுகிறது.

உயிரோடு இருப்பவர்கள் அல்ல. மரித்தபின்னரே அவர்கள் இறைவன் பாதம் அடைந்து விட்டார்கள் என்று கருதப்படுகிறார்கள்.

உயிரோடு இருக்கும்போது- இந்த உடலோடு நடமாடும்போது- தோன்றாத இறைவன்  உடல் நீக்கியபின்தான் தோன்றுவான் எனில், அதில் நம்பிக்கை கொள்ள மறுக்கிறது மனம்.
நிச்சயமற்றதாய் நீங்கிப் போகிறது காலம்.
உலகத்துப் பற்றுக்களோடு போராடிப் போராடி ஓய்ந்து போகிறது மனமும் உடலும்.

வாழ்வின் நிலையாமை குறித்த கேள்விகளுக்குப் பின்னால் நின்று சிரிக்கிறான் இறைவன்.
நம்மோடு வாழ்ந்து முடித்தவர்கள் எவரும் தத்தம் கடைசிக்காலத்தில் கடவுளைக் காட்டிப் போவதாகத் தெரியவில்லை.
இன்னும் இன்னும் கேள்விகளையே எச்சங்களாகக் கொட்டிப் போயிருக்கிறார்கள்.

நிகழ்காலத்துக்கு வழிகாட்டுகிறோம் என்பவர்களும் தத்தம் சுகமே குறியாய் வைத்துக் காரியமாற்றுகிறார்கள்.

புனிதர்கள் என்று போற்றப்படும் சிலரும் ஒருசில பொழுதுகளிலேயே போலிகளாய் முகத்திரை கிழிக்கிறார்கள்.
„கடவுள் எங்கே?“
-தேடல்களில் தீவிரமானவர்கள் இன்னும் இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

கடவுள் இருக்கிறான் என்று ஒத்துக்கொள்பவர்களும்கூட அவ்வப்போது சந்தேகப் பார்வை விரிக்கிறார்கள்.
„உண்மையிலேயே கடவுளை நம்மால் காணமுடியுமா?“ என்று அவ்வப்போது அலைபாய்கிறார்கள்.
„கடவுளை எவராவது கண்ணால் கண்டதுண்டா? சொல்லுங்கள்!“ என்கிறார்கள்.

„கடவுளை வெறும் ஊனக் கண்களால் காணமுடியாது. காற்றுக்குள் உலாவரும் உனது
கண்:களால் அந்தக் காற்:றைக் காணமுடிகிறதா?“ என்றொரு விடையை வைத்தால்-
"காற்றைக் காணாவிட்டாலும் அதை உணரமுடிகிறதே. காற்றின் தொடுகையில் என் சுவாசத்தின் மூலம் அதைக் கண்டுகொள்ள முடிகிறதே. கடவுள் அப்படி எந்த உணர்தலிலும் தோன்றவில்லையே!“

இதற்கு என்ன பதில் சொல்வது?

உணர்தல்தான் கடவுள் எனலாமா?

பல்லாண்டுகளுக்கு முன்னால் விவேகானந்தன் எனும் நரேந்திரனிடத்தும் இந்தக் கேள்விகள் இருந்தன.
„கடவுளைக் கண்டவர்கள் எவராவது இருக்கிறார்களா? அப்படி எவராவது இருந்தால் அவரை நான் சந்திக்க முடியுமா?“

கேள்விகளுக்குப் பதில்தேடி அலைந்தபோதுதான் அவனுக்கு ராமகிருஷ்ணரின் சந்திப்பு நிகழ்ந்தது.
(ராமகிருஷ்ணருடன் தனக்கு நேர்ந்த ஓர் ஆன்மீக அனுபவத்தை விவேகானந்தர் தனது நூலொன்றில் விபரித்திருந்தார்.)

விவேகானந்தர் நரேந்திரனாக இருந்த 1881ம் ஆண்டின் ஒருபொழுதில்-
ராமகிருஷ்ணரைச் சந்திக்கச் சென்றிருந்தான் நரேந்திரன்.
அவனைத் தனது அறைக்குள்  அழைத்துச் சென்றார் அவர்.
பிறகு கதவைத் தாளிட்டார்.
„எனக்கு ஏதோ உபதேசம்; செய்யப் போகிறார் போலும்!“ என்று நினைத்தான் நரேந்திரன். ஆனால் அவர் சொன்னதும் செய்ததும் அவனது கற்பனைக்கும் எட்டாததாயிருந்தது. நரேந்திரன் எதிர்பாரா நிலையில் அவர் அவனது கைகளைப் பற்றிக்கொண்டார். அளவுகடந்த மகிழ்வு அவரை ஆட்கொண்டிருந்தது. அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தன. பின்னர் அளவற்ற பரிவுடன் முன்பே அவனை நன்கு அறிந்தவர்போல் பேசினார்.
„இவ்வளவு காலம் கழித்து வந்திருக்கிறாயே இது நியாயமா? நான் உனக்காகக்  காத்திருக்கிறேன் என்பதை ஒருமுறையாவது நினைத்துப் பார்த்தாயா?  உலக ஆசைபிடித்த மனிதர்களின் பேச்சைக் கேட்டுக்கேட்டு என் காதுகள் எரிந்துபோய்விட்டன. என் மனத்தில் பொங்கும் உள்ளுணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவரிடம் சொல்ல நான் எவ்வளவு துடித்துக்கொண்டிருக்கிறேன்.!“
தேம்பித்தேம்பி  அழுதபடியே அவர் பேசிக்கொண்டிருந்தார்.
தனது இரண்டு கைகளையும் கூப்பி தெய்வத்தை வணங்குவதுபோல் அவனை வணங்கியபடி அவனைப் பார்த்து, „பிரபோ... நாராயணனின் அவதாரமாகிய மானிட வடிவே தாங்கள் என்பதை நான் அறிவேன். மனிதகுலத்தின் துயர் தீர்க்கவே இப்பொழுது அவதாரமெடுத்திருக்கிறீர்கள் என்பதையும் நான் அறிவேன்!“ என்றார்.
„கொஞ்சம் காத்திருங்கள் இதோ வருகிறேன்!“ என்றபடி அடுத்த அறைக்குள் நுழைந்தவர். திரும்பியபோது அவரது கைகளில் வெண்ணெய் கற்கண்டு இனிப்பு முதலியன இருந்தன. அவற்றைத் தனது கையால் அவனுக்கு ஊட்டத் தொடங்கினார்.
பிறகு அவனது கைகளைப் பிடித்துக்கொண்டு „கூடியவிரைவில் நீ மட்டும் தனியாக வருவதாக சத்தியம் செய்!“ என்றார். அவருடைய வேண்டுகோளை மீற முடியாமல் சரி வருகிறேன்!“ என்றான் நரேந்திரன்.

கடவுளைக் கண்டவரைக் காணச் சென்றவன், கடவுளைக் காட்டுவேன் என்று அவனுக்கு உறுதியளித்தவர், அவனையே கடவுளின் அவதாரமாகக் கருதுகிறார் என்று அறிந்தபோது திகைத்துப் போனான்.
இவருக்குப் பைத்தியமோ என்றுகூட அவன் நினைத்தான்.
ஆனால் அவரது ஏனைய செயல்களும் நடத்தையும் அவர் பைத்தியமல்ல, அவர் ஒரு ஞானி என்பதை அவனுக்கு உணர்த்தின.

தனிமனிதனின் வாழ்வின் காலம் மிகக் குறுகியது.
ஆனால் மனிதகுல வரலாறு என்பது நீண்ட ஆயுளைக் கொண்டது. இது ஆயிரக்கணக்கான அல்லது இலட்சக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருப்பது.
தனியே பிறந்து தனியே மரணித்துப் போனாலும் ஒவ்வொருவரது உயிரணுவும் இந்த மனிதகுலத்தின் எங்காவது ஓர் இடத்தில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
முதலும் முடிவும் அறியமுடியாது ஒளிந்திருக்கும் இறைவன் போல், மனித குலத்தின் முதலும் முடிவும் இன்னும் தேடலுக்குள்தான் இருக்கின்றன.

விடைதெரியும்போது மனிதன் கடவுளிலும் கடவுள் மனிதனிலும் கலந்திருப்பார்கள்

அதுவே கடைசிக் காலம் எனக் கொள்ளலாமா?
முடியாது.
ஏனெனில் கடைசிக்காலம் என்பதும் இன்னொன்றின் தொடக்க காலமாக இருக்கும்.



(பிரசுரம்: சிவத்தமிழ் -2012)
























Total Pageviews