Wednesday, July 30, 2008

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி...


-இந்துமகேஷ்






அடிக்கடி வரும் மரணச் செய்திகள்...

எதிர்காலத்துக்காக ஏங்கும் இளசுகளிலிருந்து, வாழ்ந்துமுடித்துவிட்ட பெரிசுகள் வரை..! மரணத்துக்கு வயதென்ன? ஒவ்வொருவருக்கும் ஒரு கணக்கை வைத்துக்கொண்டு காலன் காரியமாற்றிக் கொண்டிருக்கிறான். நாம் நமது வாழ்க்கைக் கணக்கைச் சரிபார்த்து ஒப்புவிப்பதற்குள் அவன் நமது கணக்கை முடித்துவிடுகிறான்.


வாழ்க்கைக் கணக்கைச் சரியாகப் போடத் தெரியாமல் ஏனோதானோவென்று கிறுக்கித் தள்ளிவிட்டு காலனின் முன்னால் போய் கலங்கி நிற்பவர்களே அதிகம்.
வாழ்வின் நெறிமுறைகளைப் பகுத்தறியத் தெரிந்த மனிதன் இந்த வாழ்வைத் தந்த இறைவனைத் தனக்குத் தெரியாது என்று சொல்லிக்கொள்ளும்போதே அவன் தன் வாழ்க்கைக் கணக்கில் தவறுவிட ஆரம்பிக்கிறான்.


“வாழ்க்கை வாழ்வதற்கே! இருக்கிறபோதே அனுபவிக்க வேண்டியவைகளை அனுபவித்துவிட வேண்டும் என்று ஆசைகளின் வழியே அலைபாயத் தொடங்குகிற மனசு. ஓட முடிந்தவரை ஓட்டம்!..பிறகு?


வைத்தியசாலைகள் நிறைந்து வழிகின்றன.+

“முந்தினமாதிரி இப்ப என்னாலை ஒண்டும் செய்ய முடிகிறதில்லை!” “ஒண்டுக்கும் உதவாமல் இப்பிடிக் கிடந்து சீரழிகிறதைவிட போய்ச் சேர்ந்திட்டால் நல்லதுபோலக் கிடக்குது!”

-முனகல்கள் கேட்கின்றன.


இப்போதும் வாழும் ஆசை தொலைந்து போய்விடவில்லை! ஒத்துழைக்க மறுக்கிற உடம்போடு எத்தனை காலத்துக்குத்தான் உயிர்வாழ முடியும்? ஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்த உடம்புக்குள் இருக்கிற உயிர்மட்டும் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறது. அது என்றும் இளமையானது என்ற ஞானம் கனிகிறபோதுதான் இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்ற உண்மையும் தெளிவாகிறது.


"நந்தவனத்திலோர் ஆண்டி -அவன்

நாலாறுமாதமாய்க் குயவனைவேண்டி

கொண்டுவந்தான் ஒருதோண்டி -அதைக்

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி!"

-எங்கிருந்தோ ஒரு சித்தனின் குரல் கேட்கிறது!


பத்துத் திங்கள் அன்னையின் வயிற்றில் குடிகொண்டு வளர்ந்த உடலை எனக்கென்று வாங்கிவந்து விரும்பியபடியெல்லாம் கூத்தாடியாயிற்று. மீண்டும் போகும்போது இந்த உடலை எறிந்துவிடத்தான் வேண்டும்.

“என்ரை மோனே!” என்று பாசம்காட்டிய என் தாயை இப்போது காணவில்லை!

“என்ரை தாத்தா!” என்று என்னை அடையாளப்படுத்துகிற பேரக்குழந்தைகள் என்னைச் சூழ நிற்கிறார்கள்.


இளமையாய் என் அன்னை எனக்குத்தந்த ஊன் உருகி இப்போது கிழமாகி நிற்கிறேன் என்ற உண்மையைப் புரிகையில் உள்ளொளியாய் என் உயிரில் கலந்துநிற்கும் இறைவன் மௌ்ளச் சிரிக்கிறான்.


..ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பிலா ஆனந்தமாய

தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த

செல்வமே சிவபெருமானே!

யானுனைத் தொடந்து சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந்து அருளுவதினியே!"


(பிரசுரம்: சிவத்தமிழ்-ஜெர்மனி)

Tuesday, July 29, 2008

வீடுவரை உறவு


-இந்துமகேஷ்.



“நேற்று என்ன நடந்தது?”

-நினைத்துப் பார்க்கிறேன்.

காலையில் கண்விழித்தது முதல், இரவு உறங்கப் போனதுவரை நிகழ்ந்தவைகள் யாவும் மனத்திரையில் வெறும் காட்சிகளாய்த் தெரிகின்றன. வழக்கம்போல நடக்கும் நாளாந்தக் காரியங்களை நிகழ்த்தி முடித்த ஒரு நாளாகவே நேற்றையப் பொழுதும் போய் மறைந்திருக்கிறது.


முற்றுமுழுதாய் என்னென்ன நடந்தது என்பதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை ஒப்புவிக்க முடியாதபடி சில நிகழ்வுகள் மறந்து போயிருந்தன. உண்டேன் உடுத்தினேன் என்பது தெரிந்திருந்தாலும் என்ன உண்டேன் என்ன உடுத்தினேன் என்பதைக்கூட சற்று நினைவுபடுத்தித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

அப்போதும் அவைகளைச் சரியாகச் சொல்லியிருக்கிறேனா என்பதை உறுதியாகச் சொல்லமுடியவில்லை. மனதின் நினைவுப் பக்கங்களில் எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாகப் பதித்து வைக்க முடியாதபடி ஏதோ ஒரு மாயை இடையூறு செய்கிறது.


இப்படியே இன்றையப் பொழுதும் முற்றுமுழுதாய் நினைவில் தங்காமல் நாளையப் பொழுதில் கனவாய்க் கலைந்துவிடப்போகிறது.

நிகழ்காலம் என்பது இறந்தகாலமாய் தன்னை மறைத்துக்கொண்டு விடுகிறது.

“என்ன இந்த வாழ்க்கை?”

தாம்தாம் கற்றறிந்தவரையில் இதுதான் வாழ்க்கை என்று தேர்ந்தெடுத்த வழியிலேயே ஒவ்வொருவரும் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


“இந்த வாழ்க்கையின் முடிவெங்கே?”

“இது தெரியாதா? எல்லோர்க்கும் தெரிந்த ஒரே பதில்தானே இது! மரணம்தான் இந்த வாழ்க்கையின் முடிவு!”

-பொதுவாக எல்லோரும் சொல்கிற விடைதான் அது.


“மரணத்தோடு இந்த மண்ணுலக வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனில் இத்தனைகாலம் வாழ்ந்த வாழ்வுக்கு அர்த்தம்தான் என்ன?”

இந்தக் கேள்விக்குள் ஆழ்ந்துபோகும் மனிதனுக்கு முகம்காட்டுகிறான் இறைவன்.

முடிவும் முதலும் நான்தான்!

இறைவனும் நானும் ஒன்றென இரண்டறக் கலந்துவிடும் மனிதன் மறுபடி இந்த மண்ணுலக மாயைகளில் சிக்கிக் கொள்வதில்லை. அதனால் நான் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டேன் என்று அவன் வந்து சொல்லிக் கொள்வதுமில்லை. அப்படிக் கண்டதாகச் சொல்லிக்கொள்பவன் உண்மையில் இறைவனைக் கண்டதுமில்லை.அதனால்தான் கண்டவர் விண்டிலர் என்றும் விண்டவர் கண்டிலர் என்றும் அன்று சொல்லி வைத்தார்கள்.


தனியாக வந்து தனியாகவே போய்மறைந்துவிடும் இந்த வாழ்வில் இத்தனை உறவுகள் எதனால் வந்தன? பற்று பந்தம் பாசம் என்று கட்டிக்கொண்ட உறவுகளால்தான் இந்த மாயா உலகத்தின் வண்ணங்களைக் காணமுடியும். இந்த வண்ணங்கள் கலைந்துபோகும்போது ஒவ்வொருவரும் ஞானம் பெறமுடியும் என்று வாழ்வின் விதியை வகுத்துத் தந்திருக்கிறது இயற்கை. ஞானத்தின் எல்லையில் முக்தி தரும் வீடு. அந்த வீடுபேறடைய எம்மை வலிந்து துரத்தும் உறவுகள்.

உறவுகள் பெருகப் பெருக உலகத்தின்மீதான பற்றுதல் மௌ்ளமௌ்ளக் கரையும். இந்த உண்மையை நாம் உணராது போனாலும் காலம் அதை உணர்த்தும். பிறப்புக்கு முன்பு எங்கிருந்து வந்தோம் என்ற கேள்விக்கு அப்போது விடைகிடைக்கும். உடலெனும் கூட்டுக்குள் நாம் வந்தமர்வதற்கு முன்பு எந்த வீட்டில் உலாவித் திரிந்தோமோ அந்த வீடு பற்றிய தெளிவு வரும். மறுபடி அந்த வீடுபெற வேண்டும் என்ற ஞானம் துளிர்க்கும். இந்த உடற்கூட்டை எறிந்துவிட்டு அந்த வீட்டுக்குப் போய்விட உயிர் தவிக்கும்.

அந்த வீடுவரை எம்மை அழைத்துச் செல்லவே இந்த உறவுகள்!

“என் பெற்ற தாயாரும் என்னைப் பிணமென்று இகழ்ந்துவிட்டார்

பொன்பெற்ற மாதரும் போமென்று சொல்லிப் புலம்பிவிட்டார்

கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைத்தார்

உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே!”

(பட்டினத்தார்)


(பிரசுரம்: சிவத்தமிழ் ஜெர்மனி)

Total Pageviews