Monday, April 03, 2006

என்னுள்ளே நீ...

தேனினைத்தேடி அலையும் வண்டாய்
தெய்வம் தேடி ஓடும்என் னுள்ளம்
வானினைத் தேடி மறைந்தவர் பலரும்
வந்துளம் தனிலே தெய்வமாய்ப் புகுந்தார்.
வாழும் வரைதம் வார்த்தைக ளாலே
வழிபல சொன்னவர், மறைந்த பின்னாலே
ஆளும் அவர்தம் ஆன்மிகத் தேடல்
அதன் பின்னாலே என்மனம் ஓடும்.
-இந்துமகேஷ்.


------------------------------------------------------
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை !"
-ஒரு திரைப்படப்பாடலில் கவியரசு கண்ணதாசன் சொன்னது.
அண்மையில் அவரது கவிதைத் தொகுதியொன்றில்
என் பார்வை பதிந்தபோது -
அவர் என்னிடம் சொன்னார்:


கடவுளை நம்பினால்
கவிஞன் ஆகலாம்.







கடவுளை நம்புக! கடவுளைப் பற்றிய
கவிதைக ளெல்லாம் கற்றுத் தேறுக!
நடமிடும் தெய்வம் இராமனின் காதை
நற்பா ரதத்து நெறிகள் யாவும்
ஆய்ந்து படித்து அறிக பொருள்களை!

சாத்திரம் வேதம் தர்மம் தத்துவம்
தமிழன் முருகன் தனைப்புகழ் புராணம்
அனைத்தும் அறிக! அறிந்த பின்னாலே
எடு பேனாவை! எழுதுக கவிதை!
ஊற்றுக் கேணியின் உட்புறம் சுரக்கும்
ஆற்றுச் சுவைநீர் ஆமதன் பெருக்கம்!

நாத்திகக் கூடு நரிக்கு மட்டுமே!
நாலா புறமும் நற்கரம் விரித்து
மேலும் கீழும் விண்ணையும் மண்ணையும்
ஆழ அளந்து அள்ளித் தெளித்து
ஜனனம் பற்றிய தத்துவம் எழுதுக!
மரணம் பற்றிய மயக்கம் எழுதுக!
நீண்ட இழைகளில் நெய்யும் சேலைபோல்
ஆண்டவ தத்துவம் ஆயிரம் எழுதலாம்!

கடவுள் என்பது கல்லே யானால்
மனிதன் என்பவன் மரமே யாவான்!
மரத்தின் பேனா மைசுரக் காது!
மானிடம், தெய்வதம் வடித்த பொன்னிழை
பலபொருள் தேடுக! பலவகை பாடுக!
பகுத்தறி வென்பது பகுத்துப் பகுத்து
முடிவில் காண்பது மூலப் பொருளையே!

செத்தபின் உயிர்கள் சேர்வது எங்கே?
தெரியும்வரை நீ தெய்வத்தை நம்பு!
நம்பிக்கை தான் நற்பொருள் வளர்க்கும்
நம்பு கடவுளை நல்ல கவிஞன் நீ!
பல்பொருள் அறிந்த பாவலர் சில்லோர்
சில்பொருள் மட்டுமே தேறிய தெதனால்?
அளவிற் கவிதை அதிகமா காமல்
குறைவே யான குறைபா டெதனால்?
நாத்திகச் சிறையை நம்பிக் கிடந்ததால்!
ஆகவே எனது அருமைத் தோழனே
கடவுளை நம்புக! கவிஞன் நீயே!

(நன்றி: கண்ணதாசன் கவிதைகள் 6வது தொகுதி)

No comments:

Total Pageviews